வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

பக்கத்து வீட்டு மாலதியின் பாத்ரூம்


இன்னைக்காவது பக்கத்துக்கு வீட்டு மாலதி குளிக்கும் போது எப்படியாவது அதை பார்த்து விடவேண்டும்! அதை நெனைக்கும் போதே  மனதிற்குள்  பட்டம் பூச்சிகள் பறந்தன. இரண்டு முறை ட்ரை பண்ணியாச்சி, காரியம் கை கூடவில்லை.
 ஒரு முறை முயற்சித்த போது மாலதியின் வீட்டுக்காரர் வந்து விட்டார், அவரிடம் சாக்கு போக்கு கூறி தப்பிச்சதே பெரும் பாடாய் போய்விட்டது.

அடுத்த முறை பாத்ரூம் கதவின் அருகே போய்ப் பார்த்து கொண்டிருக்கும் மாலதி குளித்து முடித்து கதவிலிருந்து துணிகளை உருவி எடுத்துவிட்டாள், சரியாக பார்க்க முடியாமல் ஏமாந்து திரும்பி விட்டேன் 

இன்று அருமையான சந்தர்ப்பம், அவளுடைய வீட்டுக்காரர் ஊருக்கு போயிருப்பதாக வேலைக்காரியின் மூலம் தெரிந்து கொண்டேன்.  அதனால் எந்தவித அவசரமின்றி வெகு நேரம் குளிப்பாள்,  இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது எனக் காத்திருந்தேன்.

மாலதி மாநிறமென்றாலும் நல்ல உடல் வாகு. பார்ப்பவர்களை மறுபடியும் பார்க்க தூண்டும்  கவர்ச்சி அவளிடம் உண்டு . அதில் அவளுக்கு ஒருவித பெருமை. குழந்தை இன்னும் இல்லை, அதனாலென்னவோ உடல் கட்டுக்கோப்பை இழக்கவில்லை. 

என் வீட்டு வேலைக்காரி துணியை ஊறவைத்து சென்றுவிட்டால் மீண்டும் மதியம் தான் வருவாள்.  இப்போது அவளும் கிளம்பி விட்டாள், எனக்கு இப்படி ஓர் சந்தர்ப்பம் கிடைத்ததை நெனைச்சு சந்தோசப்பட்டேன்.

பக்கத்துக்கு வீட்டில் வெளியே சத்தம் கேட்டது, ஆம் மாலதி தான் குளிப்பதற்கு தயாராகி விட்டாள், அவள் வெந்நீரை விளாவும் சத்தம் கேட்டது. என் வீட்டு காம்பவுண்ட் , மாலதி வீட்டு பாத்ரூம் சுவரை ஒட்டி இருப்பதால் அங்கு ஏற்படும் சத்தம் நன்றாக கேட்டது .  எனக்குள் படபடப்பு அதிகரித்தது. மெதுவாக ஈரத் துண்டு காய வைக்கும் சாக்கில் வெளியே வந்து நோட்டமிட்டேன். என் வீட்டு கம்பவுண்டிலிருந்து பக்கது வீட்டிற்கு  செல்ல ஓர் இடை வெளி உண்டு. அதில் தான் வேலைக்காரி வந்து செல்வாள்.

இப்போது மாலதி மாற்று துணிகளோடு பாத்ரூம் பக்கம் செல்வதை பார்த்தேன். மெதுவாக  நகர்ந்து அவளுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டேன். சிறிது நேரத்தில் பாத்ரூம் கதவு மூடும் சத்தம் கேட்டது. எனக்கு உள்ளுக்குள் மணியடித்தது. அக்கம் பக்கம் திரும்பி பார்த்து பாத்ரூம் அருகே சென்றேன்.

அப்போது மறுபடியும் மணியடித்தது, நம் மனசுக்குள் மணியடித்தால் இவ்வளவு சத்தமாகவா கேட்கும் என என்னை நானே கேட்கும் போது வெளியே நாய் குறைக்கும் சத்தம். மறுபடியும் மணி அடிக்கும் சத்தம், அட கஷ்ட காலமே ! நம் வீட்டில் தான் யோரோ ! காலிங் பெல் அடிக்கிறார்கள். யாரடா இது, பூஜை வேளையில் கரடி. விட்டுவிட்டு போகவும் மனசில்லை, மறுபடியும் பெல் சத்தம்,

வேகமாய் வீட்டிற்குள் போய் கதவை திறக்காமல் யாரது என எரிச்சல் கலந்த குரலில் கேட்டேன்.

பழைய பேப்பர் இருக்குங்களா? வரச்  சொல்லியிருந்தீகளே! என்றான் பழைய பேப்பர்காரன். இல்லப்பா ! அடுத்த வாரம் வா, சேர்த்து தாரேன் என்றேன் அவசரமாக. இருப்பதை கொடுங்க, பிறகு அடுத்த மாசம் தான் வருவேன் என்றான். இப்போ இல்லையப்பா, எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது, அடுத்த மாதம் வாங்கிக்கோ! என்று அவசரப்பட்டேன், சரிங்க ... என கூறி சென்று விட்டான்.

இவனுகளுக்கு நம்ம அவசரம் தெரியறதில்ல! என புலம்பியவாறு வேகமாக பின் புறம் சென்றேன், அதற்குள், மாலதி சோப் போட ஆரம்பித்திருந்தாள், மைசூர் சாண்டல் மனம் தூக்கியது.  மெதுவாக காம்பவுண்ட் இடை வெளியில் நுழைந்து ஓசைப்படாமல் மாலதி குளிக்கும் பாத்ரூம் கதவை நெருங்கினேன் .
அதில் பச்சை நிற சேலை, மாட்சிங் ப்ளவுஸ், பாவாடை தொங்கியது. முக்கியமான உள்ளாடையை காணோமே என்று கண்களை இடுக்கி பார்த்தேன். பாவாடைக்கும் பிளவுசுக்கும் இடையில் அந்த கருப்பு நிற பிரா தொங்கியது.  அதில்  வெள்ளை நூலில்  தைத்திருந்த ஊக்கு அது  என்னுடைய பிரா தான் என எனக்கு அடையாளம்  காட்டிற்று.   அப்பாடாநாம் நெனைச்சது கரெக்ட் தான், போன வாரம் தொலைந்து போன என கருப்பு பிரா இதே தான்.

இந்த வேலைக்காரி, பக்கத்துக்கு காம்பவுண்டில் காற்றடித்து விழுந்து விட்ட என் துணிகளை எடுக்கும் போது இதை மறந்து விட்டாள். இந்த சந்தேகம் எனக்கு அப்போதே வந்து அவளை விசரரித்தும் பார்த்துவிட்டேன், அவள்  எல்லா துணிகளையும் எடுத்து விட்டதாக சாதித்தாள்.

நேரடியாக மாலதியையே கேட்கவும் பயமாயிருந்தது, அவள் வெடுக்கென்று எதாவது சொல்லி விடுவாள். அதனால் தான் நாமே அவள் குளிக்கும் போது கண்டுபிடித்து விடலாமென்று, இன்று பார்த்துவிட்டேன். நாளை போய் தைரியமாய் கேட்டுவிடலாம், என்ன சொல்லுகிறீர்கள் !

கருத்துகள் இல்லை: